Mittwoch, 21. Mai 2008

சொல்லாதே யாரும் கேட்டால்..........2

சொல்லாதே யாரும் கேட்டால்..........2
அதுக்கடையிலை ரெலிபோன் வேற கிணுகிணுக்கத் தொடங்கிச்சுது.

ஆரடா இது சிவபூசையுக்கை கரடி பூந்த மாதிரி ஏமசாமத்திலை என்று எரிச்சலாப் போனை எடுத்தால்.

Raskut speaking என்று பந்தாவாகவும் அதட்டலாகவும் தொலைபேசி உறுமியது.

குரலைக் கேட்ட உடனையே இந்த நேரங் கெட்ட நேரத்திலை ராசுக்குட்டியன் எடுக்கிறான் எண்டால் எதுவும் விவகாரமான விசயமாத்தான் இருக்குமெண்ட நினைப்பிலை எனக்கு அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு பேச்சே வரேல்லை. ரெலிபோனெண்டால்

ஓய் அம்பலம். அம்பலத்தார் என்ன பேச்சு மூச்சையே காணேல்லை என்று கரகரக்குது.

ஒருமாதிரியாச் சமாளிச்சுக்கொண்டு

என்ன ராசுக்குட்டியர் என்னவும் விசேசமே இந்த நேரத்திலை..............என்று முடிக்க முந்தியே

நீர் செய்யுறது உமக்கே நல்லா இருக்குதே கத்தவும்

நான் பயத்திலை சொல்ல வேணுமெண்டுதான் நினைச்சனான் பாரும், செல்லம்மாதான் அவசரப்பட்டு ஒருத்தருக்கும் சொல்ல வேண்டாமெண்டு............ என்று உளறத் தொடங்கவும்.

என்ன விசயத்தை போட்டு உடைக்கிறதெண்டு முடிவு எடுத்திட்டியளே என்று செல்லம்மா காதுக்கை சிடுசிடுக்கத்தாள்.

இதுகளையெல்லாம் கவனிக்காமல் அவனெண்டால் அங்கால

மனசில பாலகுமாரன், சுஜாதா என்ற நினைப்புப்போல....... என்று பொரிஞ்சு தள்ளினான்.

என்னடா இது ஒண்டுமாப் புரியேல்லை என்று நைசா விசயத்தை அவனிட்டையே கேட்டால்

எழுதுறதெண்டால் ஒழுங்கா எழுத வேணும். அவன் எழுதுறான் இவன் எழுதுறான் விட்டனோ பார் என்று கன்னாபின்னா என்று எழுதும் பிறகு முடிக்கத்தெரியாமல் கதையைப் பாதியிலை அம்போ என்று விட்டிடும் சனம் சிரிக்குது.

உப்பிடித்தான் வாணிவிழா மேடையிலை அம்பலத்தார் அது இது எண்டு ஒரு கதைவிட்டீர் பிறகென்னடா என்றால் கப்சிப் மிச்சக் கதையைக் காணம்.

அட உதே விசயம் நான் என்னவோ ஏதோ எண்டு பயந்தெல்லே போனன். அது வந்து............ அந்த விசயத்தைச் சொன்னனெண்டால் கன சிக்கல் பாரும் பிறகு நான் வீட்டிலை இருந்தபாடில்லை அதுதான்...........

என்ன கண்டறியாத சிக்கலோ?.

அதிலை என்னத்துக்குக் காணும் என்னையும் இழுத்தனீர்? சனங்களும் எத்தனை நாளைக்குத்தான் பொறுக்குங்கள் சலிச்சுப்போய் கடைசியிலை

என்ன ராசுக்குட்டியர் அம்பலத்தார் சொல்லுற மாதிரித் தெரியேல்லை. நீரெண்டாலும் மிச்சக்கதையைச் சொல்லுமன் அண்டைக்கு வாணிவிழா மேடையிலை நிண்டது ஆரப்பா? என்று கண்டவன் நிண்டவனெல்லாம் கேக்கத் தொடங்கிவிட்டாங்கள் தெருவிலை தலைகாட்டமுடியேல்லை.

இனிமேல் எதாவது கதை அது இதெண்டு என்ரை பேரை இழும் பிறகு தெரியும் ராசுக்குட்டியன் ஆரெண்டு என்று வெடிச்சுத் தள்ளிப்போட்டு டொக்கெண்டு போனை வச்சிட்டான்.

இந்தக் கதையளோட வந்த ஆசையெல்லாம் பொசுக்கெண்டு அடங்கிப்போய் இழுத்து மூடிக்கொண்டு பேசாமல் படுத்தால், அடுத்தபக்கத்தாலை

என்னப்பா அதுக்குள்ள படுத்திட்டியளே? செல்லம் செல்லம் என்று ஆசையா எதோ சொல்ல வந்தியள்..............என்றவும்

ஆசையோ மனுசன் படுற பாட்டுக்கை இப்ப அது ஒன்றுதான் குறைச்சல் என்று எரிஞ்சு விழுந்தன்.

அவளுமோ விடாமல் உங்கட ஆசையளுக்குக் குறுக்காலை நான் எப்பவாவது நின்றிருக்கிறனே என்று கொஞ்சலாகக் கிசுகிசுத்தாள்.

இதுபோதுமே பிறகென்ன ஐயா வழமைபோல வழியத் தொடங்கினன்...................

எனக்குத் தெரியும் இந்தமாதிரி விசயங்களைப் பார்த்தால் கனபேருக்குப் பொறுக்காது வயித்தெரிச்சல் தொடங்கிவிடும் என்று, ஆனாலும் அவையளோட எல்லாம் மல்லுப் பிடிச்சுக் கொண்டு நிக்கிறதுக்கு இப்ப எனக்கு நேரமும் இல்லை பொறுமையும் இல்லை. பிறகு வந்து கவனிச்சுக்கொள்ளுறன்.

ஆக்கம்: பொன்.அம்பலத்தார்

Keine Kommentare: